Wednesday, November 26, 2008

பொழுது விடிந்து வெர்டனை நெருங்க...

A4 நெடுஞ்சாலையில் விமானத்தை ஓட்டுவது போல் அருண் காரை ஓட்ட...வாயு வேகத்தில் பறந்து கொண்டிருந்தது அவன் கார். வலப்பக்க ட்ரைவிங் அவனுக்குப் பிரச்சினையேயில்லை. அவன் ஏற்கனவே பலமுறை மைரேஜ் விமானங்களை ஓட்டும் பயிற்சிக்குப் பலமுறை பிரான்ஸ் வந்தவனாகையால், இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல. 280 கி.மீ தூரத்தை மூன்றே மணி நேரத்தில் கடந்திருந்தான்.

ஆரம்பத்தில் மார்னே நதி தீரத்தில் திராட்சைத் தோட்டங்களும், பசிய மரக் கூட்டங்களும், செர்ரி மரத்தில் பழங்கள் செக்கச் செவேலென அடைபிடித்திருந்த காட்சியும், ஏப்ரிகாட் பழத் தோட்டங்களும், பூந்தோட்டமுமாய் மலர்ந்த காட்சி, ரீம்ஸ் நகர் தாண்டியதும் பசுநீல மலைகளாக மாறியது.


பொழுது விடிந்து வெர்டனை நெருங்க நெருங்க வழி நெடுகிலும் ஒரே மயான பூமிக் காட்சிகள்! வழி நெடுகிலும் மரணத்தை நினைவு கூறும் நினைவகங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே தியாகச் சிலுவைகள்! பிரிட்டிஷ், அமெரிக்க, பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்களுக்கென்று தனித்தனி நினைவிடங்கள்!

ஊர் மையத்தை நெருங்குவதற்குள் அவன் கண்ட காட்சிகள் அவன் எலும்புக்கூடு அதிர்வில் சதைக் கோளங்கள் பிய்ந்து சின்னா பின்னமாகி உதிர்வதைப் போல் உணர்ந்தான். வெளியே சில்லிட்ட குளிர் வேறு ஊசியாக அவனை துளைத்தது. அவன் பார்வை அவனுக்கென ஓர் இடத்தை அம்மயான பூமியில் தேடுவது பொலிருந்தது.

வழியில் அவனை டிஜிட்டல் டைரி இடைமறித்து அழைத்தது!
தகவல் கண்டதும் இரத்தம் உரைந்த மனிதனாக அருண் காரை நான்சிக்குத் திருப்பினான்!


(இங்கேயும் ஒரு சொர்க்கம் - முப்பதாவது அத்தியாயத்திலிருந்து...)

Tuesday, November 18, 2008

இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?


நில நடுக்கமென அவன் வார்த்தைகள் அவள் குருத்தேலும்பில் ஊடுருவின.

தோலுக்கடியில் சூறாவளி என சுழன்றன. அவள் இதயத்தில் அணுவெடி சோதனை நிகழ்த்தின.

அதன் அதிர்வுகள் அவள் நாடி நரம்பெல்லாம் எதிரொலிக்க அவள் நரம்புகளில் நடுக்கம் கண்ணுக்கு வந்தது. அவளுக்கு உள்ளுக்குள் வியர்த்தது. வயிற்றில் எதோ ஒரு முடிச்சி இறுக்கி பிழிவது போல் உணர்ந்தாள்.

இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?

வெண்ணை திரண்டு வரும் போது நானே தாழியை உடைத்துக் கொண்டேனே! சே!

வெளியே அவளைக் குதறி விடத்துடிக்கும் ஓநாய்க்கூட்டம்! அவள் மனத்திரையில் அலெக்ஸ்சின் கர்ண கொடூர முகம் ஒரு வினாடி தோன்றி மறைந்தது. அவள் உடல் நடுக்கமுற்றது . உள்ளே அவளை விரட்டி விடத் துடிக்கும் இளவல். இனி போலீஸ் வேறா? எமன் எனக்காக இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் போலும்? பதை பதைத்தது பேதையின் உள்ளம். சோதனையில் படுகுழியாகிப்போன அவள் இதயத்தில் இட்டு நிரப்ப பலவாறு யோசித்தாள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
ஜீசஸ்!...உங்கள் பெயரை உச்சரித்ததற்காகவா எனக்கு இந்த தண்டனை?......தேவனாகிய நீங்களா எனக்கு ஜூடாஸாக இருக்க முடியும்? ஒருக்காலும் இல்லை!

ஆபத்தான தருணங்களில் மனித மூளை அற்புதங்களை ஆற்றும் என்பது உண்மைதான் போலும்! காரிருளில் ஒரு மின்னல் கீற்று அவளைக் காக்க வந்தது போல் அடுத்த சில வினாடிகளில் அவள் மூளையின் இருண்ட அந்தகாரத்தின் வெகுதொலைவில் எங்கோ ஒரு 'பளிச்'! ஒரு நம்பிக்கை ஒளி! அந்த அடர் இருளில் அவளுக்கு விடியலைக் காட்ட...

(அவள் கதி என்னவானது ?????
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் படிப்பவர் அறிவர்)

Sunday, November 9, 2008

ஈரோடு தமிழன்பன் - 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' வெளியீட்டு விழா தலைமையுரை

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நூல் வெளியீட்டு விழாவில்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையுரை :-

தாலாட்டுப் பாடலாக நமது தாய்மார்கள் பாடக்கூடிய பாடல் "பத்துக்கடல் தாண்டி பறித்து வந்த தாமரையே" என்பது. இந்நூலாசிரியர் அறிவியல்நம்பி பத்துவருடங்கள் உழைத்து இந்நூலை உருவாக்கி இருக்கிறார். ஒரு பொருளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த உழைப்பின் பயனை அவர்கள் அடையவில்லை. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

நியூஜெர்சிக்கு நான் சென்றிருந்த போது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் கடைசியாகக் கரும்பலகையில் எழுதி வைத்திருந்த 'இயற்பியற் சூத்திரத்தை' அப்படியே பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

நியூ ஸ்டோரி என்பது நாவலாகும். இந்த நாவல் 'நாவல்லா' என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இந்நூலில் சொல்லவேண்டிய கருத்துக்களை சொல்லவேண்டிய விதத்தில் வாசகர்களுக்கு அலுப்புத்தட்டாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கவிதைகளாகக் கதை வெளிப்பாடுகள் காணப்படுகின்றன.

கதைக்குள்ளாக அறிவியல் விஷயங்கள் இடையிடையே கூறப்படும் போது வாசகர் பார்வை வேறு பகுதிக்கு மாறிவிடாதிருக்கும்படி மிகச் சாமர்த்தியமாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர். இதைச் சரியாகச் செய்யாது போனால் அனைத்தும் வீணாகிவிடும்.

அதேபோல் இந்நூலில் நாடு நகர்கள் பற்றி விவரித்திருக்கும் விதம், சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் ஆடற்கலைச் சிறப்புப் பற்றிக் கதையிலிருந்து விலகி விரிவாகப் பேசப்பாட்டாலும், அவை தமிழர் கலைத்திறனாக எக்காலத்திலும் தமிழ்மக்களிடையே பதிய வேண்டியவை என்பதனால் பொருந்தி நிற்கின்றன. இந்நூலில் பேசப்படும் நாடுகளில் மொனாக்கோ என்ற சின்னஞ்சிறிய நாட்டைப் பற்றிய தகவல் கூட சுவையாகக் கூறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

புதினங்களை மூன்று பெரும் வகைகளாக சமூகப் புதினம், வரலாற்றுப் புதினம், அறிவியல் புதினம் எனக் கொள்ளலாம். மூன்றும் கலந்த கலவையாக இந்நூல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் இந்நூலில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றியது. கதாநாயகி தாரிணியாகட்டும், ஓரிரு இடங்களில் பேசப்படும் ஜெனிபர், நிஷாந்தியாகட்டும், இன்டர்போல் அதிகாரியாக வரும் வினோதினியாகட்டும் அனைவரும் மிக உயர்வாக, அறிவார்ந்த பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருடா விமானத்தின் வேகத்தைவிட அதிவேகத்தில் அவளிடமிருந்து விலகி ஓடிவிடத் துடிக்கும் அவன் உள்ளம் என்றும், தாரிணியைப் பற்றி சொல்லும் போது, குளிர் நிலவென நெற்றி, இன்பமொழி பேசும் கண்கள், கம்ப்யூட்டர் வரைவில் மூக்கு, கிள்ளிப்பார்க்கத் தூண்டும் கன்னம், என்றும் நாவலின் வர்ணணைகளில் கூட அறிவியல் வார்த்தைகள் கையாண்டவிதம் அற்புதமானது.

நூலின் தனிச்சிறப்புகள்:


1. சமூகத்தளத்தில் இயங்குகிற வாழ்க்கையின் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை கூறுகள்.

2. இவற்றினூடாக இயங்கும் விஞ்ஞான தொழில்நுட்ப புதுமைகள் கதையைச் சேதப்படுத்தாமல் சிதைக்காமல் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் அவற்றின் மிகத் துல்லியமான விவரங்களும்.

3. இது விஞ்ஞானக் களத்தில் இயங்கும் கதை என்பதனால் விஞ்ஞான கூறுகள் உவமைகள்கூட மின்னி வெளிப்படுகிற மேம்பாடு.

4. கலைச் சொல்லாக்கம் கதையின் நோக்கம் இல்லையானாலும் ஆங்காங்கு ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற விஞ்ஞான கலைச்சொற்களுக்கு தகுந்த முறையில் தமிழில் உருவாக்கி பயன்படுத்தியிருக்கும் முறைமை.

இப்புதினம் ஒரு கலைப்படைப்பாக கருதத்தக்கது என்னும் சமூக உண்மைகளுக்கு சமன்பாடான நிலையில், விஞ்ஞான உண்மைகளையும் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் கலைப்பணி, சமுதாயப்பணி, விஞ்ஞானப்பணி, தமிழ்ப்பணி என நான்கு கோணங்களிலும் தமது எல்லையை விரிவுபடுத்தி தன் வெற்றியைச் சாதித்திருக்கிறது என்று என்னால் கூற முடியும்.

Friday, November 7, 2008

"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்"


தமிழகத்தில் நூல் பதிப்பகங்கள் ஐநூறு உள்ளன. இந்த பதிப்பகங்கள், தனி நபர்கள் பதிக்கக்கூடிய நூல்களைத் தமிழக அரசு வருடம்தோறும் 12 கோடிக்கு வாங்குகின்றது. இப்படி வாங்கக் கூடிய இந்தப்பணம் மக்களது வரிப்பணம்.

கட்டிலிலிருந்து கத்திரிக்காய் வரை விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு நூலகவரி என்ற ஒன்று உள்ளது. இந்த வரிப்பணம் அனைத்தும் மக்களுக்காக நூல்களை வாங்கி நூலகங்கள் மூலம் மக்கள் அறிவு வளர்ச்சி அடைய பயன்படுகின்றது.

பதிப்பகங்கள் நல்ல நூல்களை மக்களுக்குத் தேவையானவற்றை பதிப்பிக்க வேண்டும். 25% பதிப்பகங்களே நல்ல நூல்களைப் பதிப்பிக்கின்றன.
கேரளாவில் உள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய முறையில் கௌரவித்து 'ராயல்டி' தருகின்றன. அத்தகைய நிலையை தமிழிலும் உருவாக்க பதிபகங்கள் முன்வர வேண்டும்.

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால், பூஜை அறையை போல் அங்கு நூல்களை வைப்பதற்கும் ஒரு அறையை நிர்மானியுங்கள். நமக்கு அறிவுக்கண் திறக்க அது வழி வகுக்கும்.

"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்" என்றார் கண்ணதாசன். அழுக்கை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் கடலலை சங்கு, பாசிகளை கரையில் கொண்டு வந்து தள்ளுகின்றன. இதனைப் போன்று நல்லவைகளைப் பதிப்பகங்கள் பதிப்பிக்க வேண்டும்.

- இவ்வாறு தமிழக நூலக ஆணைக்குழுத் தலைவர் திரு. கயல் தினகரன் அவர்கள், 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூல் வெளியீட்டு விழாவின் போது உரையாற்றினார்.

Wednesday, November 5, 2008

'இங்கேயும் ஒரு சொர்க்கம்' - வெளியீட்டு விழா

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் 03/11/08 அன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் "இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூலை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

உடன் (படத்தில் இடமிருந்து) காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வீ.சித்தண்ணன், புலவர் செ.பொன்னம்பலம், நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் மற்றும், நூலாசிரியர் அறிவியல்நம்பி.

நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., இராயபேட்டை, சென்னை -600 014. தொலைபேசி : 044 - 28482441 / 28482973 மின்னஞ்சல்: pavai123@yahoo.com

நியு செஞ்சுரி புக் ஹௌஸ் பிரைவேட் லிமிடெட்
புதிய எண் 156 / பழைய எண் 786,
அண்ணா சாலை (ரஹேஜா டவர் அருகில்), சென்னை - 600 002 தொலைபேசி : 044 - 28528351

மற்றும் தமிழகத்தில் உள்ள
நியு செஞ்சுரி புக் ஹௌசின் அனைத்து கிளைகள்.

நூல் வெளியீட்டின் போது எடுத்த புகைப்படங்களை அருகில் உள்ள ஆல்பத்தில் காணலாம்.