Sunday, December 28, 2008

'பங்கீ ஜம்ப்பிங்'

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம் 34 

கார்சிகா

'பங்கீ ஜம்ப்பிங்' (Bungee Jumping) என்பது ஹெலிகாப்டர்கள், செங்குத்தான மலை உச்சிகள், உயரமான கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றிலிருந்து கீழே பாதாளத்தை நோக்கித் தலைகீழாய்க் குறிப்பிட்ட இலக்கில் குதிக்கும் முறையாகும். குதிப்பவரின் கால்களை ரப்பர் கயிறு பிணைத்திருக்க, அந்த இணைப்பிலுள்ள ஸ்பிரிங் அசைந்து அசைந்து வேகத்தைக் குறைக்க, குதிப்பவர் தரையை நெருங்கும் போது சாதாரணமாக ஒரு திண்ணையிலிருந்து குதிக்கும் வேகத்தில் தரையில் இறங்குவார்.



அன்று நடு நிசியில் கார்சிகா தீவின் தென்பகுதி மலை உச்சி ஒன்றில் பிரெஞ்சு இராணுவ ஹெலிக்காப்டர் ஒன்றின் மூலம் சப்தமின்றி 'பங்கீ ஜும்பிங்' மூலம் கீழே குதித்தான் அருண். குளிருக்கான ராணுவ உடைகள் அணிந்திருந்தாலும் உடைகளை மீறி கடும் குளிர் துளைத்தெடுக்க, 600 அடி உயரத்தில் நிலை நின்ற ஹெலிகாப்டரிலிருந்து மலைஉச்சியில் உள்ள சிறய சமநிலைப் பகுதியில் குதித்தான். மலை மீதிருந்து மெதுவாக பாறைகளை பற்றி இறங்கினான். மலை ஏறி இறங்கும் பயிற்சி அவனுக்கு இப்போது கை கொடுத்தது. பாறைகளின் வழியே 300 அடிக்கு கீழே இறங்கிய பிறகே மரம் செடி கொடிகளிடையில் அவன் ஐக்கியமானான். பொழுது புலரும் முன் கருக்கிருட்டிலேயே, அவன் மலை அடிவாரத்துக்கு சென்று விட திட்டமிட்டான். சில இடங்களில் முரட்டு செடிகொடிகளும் முட்புதர்களும் அவனுக்கு திகிலூட்டின. வன ஜந்துக்கள் சில இடங்களில் அவனை பயமுறுத்தின.

இருளைக் கவசமாக்கிக்கொண்டு இறங்கியவனுக்கு மேலும் சோதனைகளைக் கொடுத்தது மேகங்கள். ஏற்ற இறக்கமான மலை பிரதேசம் அவன் மூச்சை திணறடித்தன. வாயின் இருபுறமும் கோர பற்களையுடைய ஆபத்தான காட்டுப் பன்றிகள் பற்றி அவன் ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறான். அவன் கை, துப்பாக்கியை ஒருதரம் தடவிப்பார்த்துக் கொண்டது. மலை ஆடுகள் தண்ணீர் இருந்த நீரோடைகளின் கரைகளில் படுத்துக் கிடந்தன. மலை அடிவாரத்தை நெருங்கியதும் அவன் விழிப்புடன் செயல்பாட்டான்.

பொழுது விடிய இருந்த நேரம். ஆனாலும் அங்கு கும்மிருட்டுதான். ஒரு மரக்கிளையைப் பிடித்து அவன் திரும்ப இருந்த நேரம், திடீரென மௌனத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு வேதனைக்குரல் விண்ணைப் பிளந்தது. அவன் முதுகுத்தண்டை உறைய வைத்து அப்பிரதேசமே நடுங்கும் கிரீச்சிடும் ஒலி. அவன் சப்த நாடியும் அடங்கிவிட்டது. சப்தம் வந்த திசையில் உற்றுப்பார்த்தான். இருளில் ஒன்றும் புலப்படவில்லை. மேலும் கீழே இறங்கி வந்து பார்த்தான். இருளில் பார்க்கக்கூடிய டெலெஸ்கோப்பை கொண்டு ஆராய்ந்தான். அங்கு ஒரு குகை இருக்கவேண்டும். இருள் தன் கட்டு குலைந்த அச்சமவெளிப் பகுதியில் அவன் கண்கள் ஊடுருவ, குகைக்குள்ளிருந்து இருவர் ஓடிவந்ததை அவன் கண்டான். அந்தக் குரலின் குலைநடுக்கத்தின் வீச்சு அவன் இதயத்தின் மையத்திலிருந்து அவன் உடலெங்கும் இன்னும் பரவிக் கொண்டிருந்தது.

... .... .....

இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது !!!

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம்-37

பாரிசிலிருந்து மும்பைக்கான அந்த விமானம் தூனிஸ் நகரிலிருந்து சரியாக மாலை 5.30 க்குப் புறப்பட்டது. விமானம் விண்ணில் தாவி உச்சிக்கு வந்து 30000 அடி உயரத்தில் நிலைகொண்ட போது பயணிகள் கண்களுக்கு விருந்து அளித்த அட்லாஸ் மலைத் தொடர்களின் கம்பீரமான எழில் தோற்றம், துனிசிய வளைகுடாவை நோக்கி இரு பகுதிகளாகி, கிழக்கில் வர வர மலைத் தொடர் சறுக்கி துனிசிய வளைகுடாவில் சரிந்து கலந்து மறைந்து கொண்டிருந்தது. துனிசியாவின் ஜீவ நதி மஜர்தா, இரு மலைத் தொடர்களுக்கும் இடையில் ஓடி அப்பள்ளத்தாக்கை பச்சைப் பசேல் எனக்காட்டி கண்களைக் கவர்ந்தது. தெற்கிலுள்ள தாபஸ்ஸா மலைத்தொடர் தெற்கு நோக்கி குன்றுகளாக இறங்கி பீடபூமியாக மாறி சகாரா பாலைவனத்தில் சங்கமித்தது.

ரோமானியர்களின் உணவுக் களஞ்சியம் துனிசியா, பார்வையிலிருந்து விடைபெற, துனிசிய வளை குடாவில் மேலெழும்பிய விமானம், மத்தியதரைக் கடல் பகுதியில் பிரவேசித்த போது துனீசிய நேரம் மணி 5.45 (16.45 GMT) விமானப் பணிப்பெண்கள் ஒரு பக்கம் குளிர்பானங்களை வினியோகிக்க, மறுபக்கம் அதுவரை கண்களுக்கு விருந்தளித்த அட்லாஸ் மலையின் அழகிய சிகரங்கள் பின்னோக்கி விலகி மறைந்து கொண்டிருந்தன. சிலர் பானங்களை பருகியபடி காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். சிலருக்கு பானங்களில் மனம் லயிக்கவில்லை. அவர்கள் மனம் துனிசியாவின் ரம்யமான புகழ் பெற்ற மாலை நேரக் காட்சிகளில் லயித்திருந்தன. துனிசியாவின் பிரத்தியேக வயலட் வண்ணத்தில் மாலை நேரம் மிளிர, கடலில் ஒரு நெருப்புக் கோளமாய் சூரியன் விழுந்து கரைந்து கொண்டிருந்தது. சிலர் நினைவுகளில் முந்திய தினங்களின் இரவுநேர இயற்கை காட்சிகள் மின்னி மறைய அந்நெஞ்சங்களில் பிரிவு ஒரு சுமையாகி கனத்தன.

கேபினில் லைட்டுகள் மங்க, சில பயணிகள் தூங்க ஆரம்பித்தனர். குளிர் பானங்களை தொடர்ந்து சாக்லெட் மற்றும் இனிப்பு வகைகளைப் பணிப்பெண்கள் வழங்க, இனிமையாகக் களித்த விடுமுறை நாட்களைப் பல நெஞ்சங்கள் நினைவு கூர்ந்தன. சில நினைவுகள் அவர்கள் மனத்திரையில் மலர்ந்து மனதுக்கு இதமளித்தன. மறக்க முடியாத நிகழ்வுகளை மனது அசைபோட்டன. பயணம் நன்கு அமைந்த மைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டன. அரை மணி நேரம் சென்றிருக்கும். விமானம் மால்ட்டா தீவுகளின் தலைநகரம் வலேட்டா மீது பறந்து கொண்டிருந்தது.

அடுத்து வந்த நிமிடங்கள் அவர்களுக்கு பெரும் மனக்கிலேசத்தையும் சஞ்சலத்தையும் கொடுத்து அவர்களை கையறு நிலைக்கு மாற்றின. வெளியே இருள் பரவ பரவ உள்ளே பயமும் பீதியும் போட்டி போட்டு பயணிகளை அச்ச மூட்டின. பயணிகளோடு பயணிகளாக வந்த சிலர் விமானத்தைக் கடத்துவதாக அறிவித்ததும், இன்ப நினைவுகள் கொடூரமானதாக மாறியது. அவர்களைப் பயமுறுத்த பல்வேறு யுக்திகளை கடத்தல்வாதிகள் கையாள, பயணிகள் மிரண்டனர்.


பின் புறமிருந்த பெண்கள் பகுதியில்தான் அந்த பயங்கரம் முதலில் ஆரம்பமானது. மணி 6.15 இருக்கும். பின்னிருக்கை ஒன்றிலிருந்து எழுந்த அலெக்ஸ், தன் கொடூர முகத்தை ஒரு கைத்துணியால் மூடிக்கொண்டு ஒரு கை குண்டைத் தூக்கி பிடித்தபடி முன்னே வந்தான். அத்துணியில் கண்களுக்கு மட்டும் இரண்டு திறப்புகள் இருந்தன. வலப்புற இருக்கையிலிருந்து முகத்தைக் கறுப்பு துணியால் மறைத்து கட்டியிருந்த யூசுப், ஒரு ரிவால்வரை தலைக்கு மேல் உயர்த்தியவன் உரத்த குரலில் சொன்னான் "இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது என்று."



Wednesday, November 26, 2008

பொழுது விடிந்து வெர்டனை நெருங்க...

A4 நெடுஞ்சாலையில் விமானத்தை ஓட்டுவது போல் அருண் காரை ஓட்ட...வாயு வேகத்தில் பறந்து கொண்டிருந்தது அவன் கார். வலப்பக்க ட்ரைவிங் அவனுக்குப் பிரச்சினையேயில்லை. அவன் ஏற்கனவே பலமுறை மைரேஜ் விமானங்களை ஓட்டும் பயிற்சிக்குப் பலமுறை பிரான்ஸ் வந்தவனாகையால், இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல. 280 கி.மீ தூரத்தை மூன்றே மணி நேரத்தில் கடந்திருந்தான்.

ஆரம்பத்தில் மார்னே நதி தீரத்தில் திராட்சைத் தோட்டங்களும், பசிய மரக் கூட்டங்களும், செர்ரி மரத்தில் பழங்கள் செக்கச் செவேலென அடைபிடித்திருந்த காட்சியும், ஏப்ரிகாட் பழத் தோட்டங்களும், பூந்தோட்டமுமாய் மலர்ந்த காட்சி, ரீம்ஸ் நகர் தாண்டியதும் பசுநீல மலைகளாக மாறியது.


பொழுது விடிந்து வெர்டனை நெருங்க நெருங்க வழி நெடுகிலும் ஒரே மயான பூமிக் காட்சிகள்! வழி நெடுகிலும் மரணத்தை நினைவு கூறும் நினைவகங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே தியாகச் சிலுவைகள்! பிரிட்டிஷ், அமெரிக்க, பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்களுக்கென்று தனித்தனி நினைவிடங்கள்!

ஊர் மையத்தை நெருங்குவதற்குள் அவன் கண்ட காட்சிகள் அவன் எலும்புக்கூடு அதிர்வில் சதைக் கோளங்கள் பிய்ந்து சின்னா பின்னமாகி உதிர்வதைப் போல் உணர்ந்தான். வெளியே சில்லிட்ட குளிர் வேறு ஊசியாக அவனை துளைத்தது. அவன் பார்வை அவனுக்கென ஓர் இடத்தை அம்மயான பூமியில் தேடுவது பொலிருந்தது.

வழியில் அவனை டிஜிட்டல் டைரி இடைமறித்து அழைத்தது!
தகவல் கண்டதும் இரத்தம் உரைந்த மனிதனாக அருண் காரை நான்சிக்குத் திருப்பினான்!


(இங்கேயும் ஒரு சொர்க்கம் - முப்பதாவது அத்தியாயத்திலிருந்து...)

Tuesday, November 18, 2008

இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?


நில நடுக்கமென அவன் வார்த்தைகள் அவள் குருத்தேலும்பில் ஊடுருவின.

தோலுக்கடியில் சூறாவளி என சுழன்றன. அவள் இதயத்தில் அணுவெடி சோதனை நிகழ்த்தின.

அதன் அதிர்வுகள் அவள் நாடி நரம்பெல்லாம் எதிரொலிக்க அவள் நரம்புகளில் நடுக்கம் கண்ணுக்கு வந்தது. அவளுக்கு உள்ளுக்குள் வியர்த்தது. வயிற்றில் எதோ ஒரு முடிச்சி இறுக்கி பிழிவது போல் உணர்ந்தாள்.

இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?

வெண்ணை திரண்டு வரும் போது நானே தாழியை உடைத்துக் கொண்டேனே! சே!

வெளியே அவளைக் குதறி விடத்துடிக்கும் ஓநாய்க்கூட்டம்! அவள் மனத்திரையில் அலெக்ஸ்சின் கர்ண கொடூர முகம் ஒரு வினாடி தோன்றி மறைந்தது. அவள் உடல் நடுக்கமுற்றது . உள்ளே அவளை விரட்டி விடத் துடிக்கும் இளவல். இனி போலீஸ் வேறா? எமன் எனக்காக இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் போலும்? பதை பதைத்தது பேதையின் உள்ளம். சோதனையில் படுகுழியாகிப்போன அவள் இதயத்தில் இட்டு நிரப்ப பலவாறு யோசித்தாள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
ஜீசஸ்!...உங்கள் பெயரை உச்சரித்ததற்காகவா எனக்கு இந்த தண்டனை?......தேவனாகிய நீங்களா எனக்கு ஜூடாஸாக இருக்க முடியும்? ஒருக்காலும் இல்லை!

ஆபத்தான தருணங்களில் மனித மூளை அற்புதங்களை ஆற்றும் என்பது உண்மைதான் போலும்! காரிருளில் ஒரு மின்னல் கீற்று அவளைக் காக்க வந்தது போல் அடுத்த சில வினாடிகளில் அவள் மூளையின் இருண்ட அந்தகாரத்தின் வெகுதொலைவில் எங்கோ ஒரு 'பளிச்'! ஒரு நம்பிக்கை ஒளி! அந்த அடர் இருளில் அவளுக்கு விடியலைக் காட்ட...

(அவள் கதி என்னவானது ?????
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் படிப்பவர் அறிவர்)

Sunday, November 9, 2008

ஈரோடு தமிழன்பன் - 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' வெளியீட்டு விழா தலைமையுரை

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நூல் வெளியீட்டு விழாவில்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையுரை :-

தாலாட்டுப் பாடலாக நமது தாய்மார்கள் பாடக்கூடிய பாடல் "பத்துக்கடல் தாண்டி பறித்து வந்த தாமரையே" என்பது. இந்நூலாசிரியர் அறிவியல்நம்பி பத்துவருடங்கள் உழைத்து இந்நூலை உருவாக்கி இருக்கிறார். ஒரு பொருளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த உழைப்பின் பயனை அவர்கள் அடையவில்லை. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

நியூஜெர்சிக்கு நான் சென்றிருந்த போது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் கடைசியாகக் கரும்பலகையில் எழுதி வைத்திருந்த 'இயற்பியற் சூத்திரத்தை' அப்படியே பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

நியூ ஸ்டோரி என்பது நாவலாகும். இந்த நாவல் 'நாவல்லா' என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இந்நூலில் சொல்லவேண்டிய கருத்துக்களை சொல்லவேண்டிய விதத்தில் வாசகர்களுக்கு அலுப்புத்தட்டாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கவிதைகளாகக் கதை வெளிப்பாடுகள் காணப்படுகின்றன.

கதைக்குள்ளாக அறிவியல் விஷயங்கள் இடையிடையே கூறப்படும் போது வாசகர் பார்வை வேறு பகுதிக்கு மாறிவிடாதிருக்கும்படி மிகச் சாமர்த்தியமாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர். இதைச் சரியாகச் செய்யாது போனால் அனைத்தும் வீணாகிவிடும்.

அதேபோல் இந்நூலில் நாடு நகர்கள் பற்றி விவரித்திருக்கும் விதம், சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் ஆடற்கலைச் சிறப்புப் பற்றிக் கதையிலிருந்து விலகி விரிவாகப் பேசப்பாட்டாலும், அவை தமிழர் கலைத்திறனாக எக்காலத்திலும் தமிழ்மக்களிடையே பதிய வேண்டியவை என்பதனால் பொருந்தி நிற்கின்றன. இந்நூலில் பேசப்படும் நாடுகளில் மொனாக்கோ என்ற சின்னஞ்சிறிய நாட்டைப் பற்றிய தகவல் கூட சுவையாகக் கூறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

புதினங்களை மூன்று பெரும் வகைகளாக சமூகப் புதினம், வரலாற்றுப் புதினம், அறிவியல் புதினம் எனக் கொள்ளலாம். மூன்றும் கலந்த கலவையாக இந்நூல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் இந்நூலில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றியது. கதாநாயகி தாரிணியாகட்டும், ஓரிரு இடங்களில் பேசப்படும் ஜெனிபர், நிஷாந்தியாகட்டும், இன்டர்போல் அதிகாரியாக வரும் வினோதினியாகட்டும் அனைவரும் மிக உயர்வாக, அறிவார்ந்த பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருடா விமானத்தின் வேகத்தைவிட அதிவேகத்தில் அவளிடமிருந்து விலகி ஓடிவிடத் துடிக்கும் அவன் உள்ளம் என்றும், தாரிணியைப் பற்றி சொல்லும் போது, குளிர் நிலவென நெற்றி, இன்பமொழி பேசும் கண்கள், கம்ப்யூட்டர் வரைவில் மூக்கு, கிள்ளிப்பார்க்கத் தூண்டும் கன்னம், என்றும் நாவலின் வர்ணணைகளில் கூட அறிவியல் வார்த்தைகள் கையாண்டவிதம் அற்புதமானது.

நூலின் தனிச்சிறப்புகள்:


1. சமூகத்தளத்தில் இயங்குகிற வாழ்க்கையின் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை கூறுகள்.

2. இவற்றினூடாக இயங்கும் விஞ்ஞான தொழில்நுட்ப புதுமைகள் கதையைச் சேதப்படுத்தாமல் சிதைக்காமல் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் அவற்றின் மிகத் துல்லியமான விவரங்களும்.

3. இது விஞ்ஞானக் களத்தில் இயங்கும் கதை என்பதனால் விஞ்ஞான கூறுகள் உவமைகள்கூட மின்னி வெளிப்படுகிற மேம்பாடு.

4. கலைச் சொல்லாக்கம் கதையின் நோக்கம் இல்லையானாலும் ஆங்காங்கு ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற விஞ்ஞான கலைச்சொற்களுக்கு தகுந்த முறையில் தமிழில் உருவாக்கி பயன்படுத்தியிருக்கும் முறைமை.

இப்புதினம் ஒரு கலைப்படைப்பாக கருதத்தக்கது என்னும் சமூக உண்மைகளுக்கு சமன்பாடான நிலையில், விஞ்ஞான உண்மைகளையும் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் கலைப்பணி, சமுதாயப்பணி, விஞ்ஞானப்பணி, தமிழ்ப்பணி என நான்கு கோணங்களிலும் தமது எல்லையை விரிவுபடுத்தி தன் வெற்றியைச் சாதித்திருக்கிறது என்று என்னால் கூற முடியும்.

Friday, November 7, 2008

"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்"


தமிழகத்தில் நூல் பதிப்பகங்கள் ஐநூறு உள்ளன. இந்த பதிப்பகங்கள், தனி நபர்கள் பதிக்கக்கூடிய நூல்களைத் தமிழக அரசு வருடம்தோறும் 12 கோடிக்கு வாங்குகின்றது. இப்படி வாங்கக் கூடிய இந்தப்பணம் மக்களது வரிப்பணம்.

கட்டிலிலிருந்து கத்திரிக்காய் வரை விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு நூலகவரி என்ற ஒன்று உள்ளது. இந்த வரிப்பணம் அனைத்தும் மக்களுக்காக நூல்களை வாங்கி நூலகங்கள் மூலம் மக்கள் அறிவு வளர்ச்சி அடைய பயன்படுகின்றது.

பதிப்பகங்கள் நல்ல நூல்களை மக்களுக்குத் தேவையானவற்றை பதிப்பிக்க வேண்டும். 25% பதிப்பகங்களே நல்ல நூல்களைப் பதிப்பிக்கின்றன.
கேரளாவில் உள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய முறையில் கௌரவித்து 'ராயல்டி' தருகின்றன. அத்தகைய நிலையை தமிழிலும் உருவாக்க பதிபகங்கள் முன்வர வேண்டும்.

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால், பூஜை அறையை போல் அங்கு நூல்களை வைப்பதற்கும் ஒரு அறையை நிர்மானியுங்கள். நமக்கு அறிவுக்கண் திறக்க அது வழி வகுக்கும்.

"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்" என்றார் கண்ணதாசன். அழுக்கை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் கடலலை சங்கு, பாசிகளை கரையில் கொண்டு வந்து தள்ளுகின்றன. இதனைப் போன்று நல்லவைகளைப் பதிப்பகங்கள் பதிப்பிக்க வேண்டும்.

- இவ்வாறு தமிழக நூலக ஆணைக்குழுத் தலைவர் திரு. கயல் தினகரன் அவர்கள், 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூல் வெளியீட்டு விழாவின் போது உரையாற்றினார்.

Wednesday, November 5, 2008

'இங்கேயும் ஒரு சொர்க்கம்' - வெளியீட்டு விழா

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் 03/11/08 அன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் "இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூலை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

உடன் (படத்தில் இடமிருந்து) காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வீ.சித்தண்ணன், புலவர் செ.பொன்னம்பலம், நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் மற்றும், நூலாசிரியர் அறிவியல்நம்பி.

நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., இராயபேட்டை, சென்னை -600 014. தொலைபேசி : 044 - 28482441 / 28482973 மின்னஞ்சல்: pavai123@yahoo.com

நியு செஞ்சுரி புக் ஹௌஸ் பிரைவேட் லிமிடெட்
புதிய எண் 156 / பழைய எண் 786,
அண்ணா சாலை (ரஹேஜா டவர் அருகில்), சென்னை - 600 002 தொலைபேசி : 044 - 28528351

மற்றும் தமிழகத்தில் உள்ள
நியு செஞ்சுரி புக் ஹௌசின் அனைத்து கிளைகள்.

நூல் வெளியீட்டின் போது எடுத்த புகைப்படங்களை அருகில் உள்ள ஆல்பத்தில் காணலாம்.

Thursday, October 30, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நூல் வெளியீட்டு விழா அழைப்பிதல்

நாள் : 03.11.2008, திங்கள்
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : சென்னைப் பல்கலைக்கழகப் பவள விழா அரங்கம்,
மெரினா, சென்னை - 5

Sunday, October 26, 2008

அண்டம் - உட்கூறியல் (Anatomy of the Universe)

ண்டம் என்பது சின்னஞ் சிறிய நுண்துகள்களிலிருந்து மிகப்பெரிய விண்மீன் கூட்டங்கள் (Galactic Super cluster) வரை அடங்கும். வானவியலார் சுமார் 10,000 கோடி விண்மீன் கூட்டங்கள் (Galaxy) அண்டத்தில் மிதப்பதாகவும், ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திலும் சுமார் 10,000 கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

அண்டம் உருவாக்கத்திற்கு அறிவியலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பு அல்லது பெரும்பிரளயம் (Big Bang) என்பதாகும். பெருவெடிப்பு நிகழ்வுக்குப்பின் அந்தக் காலகட்டத்தில் அண்டம் என்பது 10000 டிகிரி உயர் வெப்ப நிலையில் வெறும் வாயுக்களாலான ஒரு பெரிய தீக்கோளமாகும். அது விரிந்து பரவி பரவி குளிரும் தன்மை உடையதாய் இருந்தது. வெப்பம் தணியத் தொடங்கியதும் முதலில் அணுக்கருவின் நுண்துகள் உருவாகி அதன் பின்னர் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியன உருவாகின.

பின்னர் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப்பின் அணுக்களின் ஈர்ப்பு விசை, வெப்பநிலை தணிதல் போன்ற காரணங்களால் தொடக்கத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய அணுக்கருக்கள் உருவாகி, விண்மீன் கூட்டங்கள் உருவாக அடிப்படை காரணிகளாக (Protogalaxy) அமைந்தன. மேலும் மேலும் அணுக்கரு இணைவு, வெப்பம், குளிர்தல், ஈர்ப்பு விசை ஆகிய காரணங்களால் சுமார் 500கோடி ஆண்டுகளுக்குப்பின் விண்மீன்கூடங்கள் உருவாகி பின்னர் அவற்றில் நட்சத்திரங்கள் உருவாகியிருக்கும் என்பதும், நம் சூரியன் உருவாகி 1000கோடிஆண்டுகள் இருக்கும் என்பதும் வானவியலர் கருத்து.

விண்மீன் கூட்டங்கள் கொத்துக் கொத்தாதாக (Super cluster) அண்டவெளியில் ஈர்ப்பு விசையினால் குறிப்பிட்ட இடங்களில் பின்னி பிணைந்து கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனபோதிலும் இன்னும் இந்த அண்டம் மேலும் மேலும் விரிந்து கொண்டுதானிருக்கிறது.

பெருவெடிப்பு கோட்பாட்டின் அறிவியல் உண்மைகள்:-

1. அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்கள், கிரகங்கள் துணைக்கோள்கள் அனைத்திலும் ஹைட்ராஜன், ஹீலியம், லித்தியம் கார்பன்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நீக்கமர நிறைந்து பரிமளிப்பதானது, இவைகள் ஒரு ஆதிமூல சக்தியை அடிப்படையாக கொண்டு உருவானதை நிரூபிக்கும் அம்சமாகும்.

2. சூரியனைக் கிரகங்கள் சுற்றி வருவது போல் இந்த அண்டத்தின் எந்த ஒரு நட்சத்திரமாகட்டும் அல்லது நுண்ணிய அணுத்துகளாகட்டும் அதன் மையத்தில் ஒரு நியூக்கிலியசும் அதைச் சுற்றி எலெக்ட்ரான்களும் மின்னல் வேகத்தில் சுற்றி வருகின்றன. இதுவும் நமக்கு அண்டத்தின் அனைத்து அணுக்களும் ஆதியில் ஒரே தாய்க்கருவை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கக்கூடும் என்ற பெருவெடிப்பு கோட்பாட்டை நிரூபிக்கும் அம்சமாகும்.

3. ஒரு மங்கிய கதிர்வீச்சு அண்டத்தின் எல்லா திசைகளிலிருந்தும், குளிர்ந்த பின்னனியில் ஒரே சீராக வருவதானது பெருவெடிப்பு நிகழ்வின் எஞ்சிய கதிர்வீச்சை நமக்கு உணர்த்துகின்றன.

4. காஸ்மிக் கதிர்வீச்சின் வெப்பநிலையில் காணப்படும் 'சிற்றலைகளானது' விண்மீன் கூட்டங்கள் உருவாவதற்கு முந்திய நிலையிலிருந்த (Protogalaxy) அண்டக்கோளத்தின் அடர்த்தியில் காணப்பட்ட வேறுபாட்டினை உணர்த்துவதாகும்.

5. பூமியில் உள்ள உயிரினங்களைப்போல் அண்டக் கோளத்தில் நட்சத்திரங்களின் பிறப்பும் (Formation of supernova), நம் சூரியனைப் போல் வாலிபப்பருவம் அடைந்து, கடைசியில் அவைகள் ஒரு கருந்துகளாக (Block Hole) மாறி விண்மீன் கூட்டத்திலிருந்து விலகி அண்டத்தில் கலந்து எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கி கல்லரையாகி விடுவதும் விண்ணில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியாகும். அதே போல் அண்டப் பெருக்கத்தின் காலகட்டமும் ஒருநாள் முடிந்து, அது மீண்டும் ஒரு அணுத்துகளாக சுருங்கி மறைந்து போகக்கூடிய சாத்தியக் கூற்றையும் மறுப்பதற்கு இல்லை. அந்த காலகட்டத்தை வேண்டுமானால் வானவியலர்களால் அறுதியிட்டுக்கூற முடியாதிருக்கலாம். ஆனால் நடக்ககூடிய ஒன்று என்பது மட்டும் நிச்சயம்.

6. இப்பேரண்டத்தில் இதுகாறும் மனிதனால் கண்டறியப்பட்ட விண்மீன் கூட்டங்கள், பால்வீதிகள், விண்மீன்கள் கிரகங்கள் பற்றிய உண்மைகள் வெறும் 4% மட்டுமே. ஆய்வில் உள்ள டார்க் மேட்டர் எனப்படும் பருப்பொருள் 23%. நம்மால் அறியப்படாத சக்தி 73%. ஆக அண்டத்தைப்பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் கைமண் அளவே.

மாணிக்கவாசகரும் இந்த பேரண்ட உட்கூரியல் உண்மையினை 'இல் நுழை கதிரின் துன் அணு ஒப்ப' என்ற வரிகளில் பரந்த அண்ட கோள எல்லையில் அமைந்த எத்தனையோ கோடான கோடி தூசுகளில் இந்த உலகமும் ஒரு சிறு தூசு என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதன் மூலம் தமிழர்களின் அறிவியல் சிந்தனை எத்தகையது என்பதனை அறிந்து கொள்ளலாம். அத்தகைய சிந்தனையை நாமும் வளர்க்க 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நாவலைப் படிப்போம்.

Sunday, October 5, 2008

'நானோ' அதிசயம் !


கிரேக்க மொழியில் 'நானோ' (nano) என்றால் குள்ளமானது என்று பொருள். ஒரு உரோமத்தின் குறுக்களவில் 30,000-ல் ஒரு பங்கை நாம் ஒரு 'நானோ மீட்டர்' என்கிறோம். அதாவது ஒரு மில்லி மீட்டர் நீளத்தில் ஒரு நானோ மீட்டர் நீளமுள்ள 10 லட்சம் அணுக்களை வரிசைப்படுத்திவிடலாம்.

இன்றுள்ள வைரஸ்கள் நூறு நானோ மீட்டர்கள் அளவிலானவை.
நானோ ஆராய்ச்சி வைரஸ்களையும் விட 100 மடங்கு சிறிய நுண்ணிய அணுக்களைப் பற்றியது.

நானோவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள...

வருகிறது 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'.

புத்தக வெளியீட்டு விழா பற்றிய தகவல் விரைவில் இங்கு அறிவிக்கப்படும்.

Sunday, September 28, 2008

செயற்கைப் பிரளயம்


பிரபஞ்சம் என்பது சுமார் 15 அல்லது 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 'Big Bang' எனப்படும் பெரும் பிரளயத்துக்குப் பின் உருவானது. அக்கணத்தில் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவி குளிரத் தொடங்கியதும், முதலில் அணுக்கருவின் நுண் துகள்கள் உருவாகின. பின்பு அணுவின் உட்கருவாகிய நியூட்ரான் புரோட்டான் உருவாகி அதன் பின்னரே எலெக்ட்ரான்கள் தோன்றின.

அணுக்கரு இணைவு, வெப்பம் குளிர்தல் ஆகிய காரணங்களால் விண்மீன்கள் உருவாகின. 1000 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் விண்மீன்களில் ஒன்றான நம் சூரியன் தோன்றியது.

மேற்கூறிய 'பெரும் பிரளயம்' கோட்பாட்டின் அடிப்படையில் ஜெனிவாவில் LHC (Large Hadron Collidar) மூலம் செயற்கைப் பிரளயம் ஒன்றை உருவாக்கி முதன் முதலில் தோன்றிய துகளின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

இதுவே கடவுள் துகளாக (Higgs boson particle) இருக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதைப் பற்றி எனது முந்தய இடுகையில் கூறப்பட்டுள்ளது. இதுவே அணுக்களுக்கு மிக முக்கியமான பொருள் திணிவை (mass) அளிப்பதுமாகும்.

பிரபஞ்சத்தின் கிரகங்கள், நட்சத்திரங்கள், கரும்புள்ளிகள் (black holes) ஆகிய அனைத்திற்கும் அடிப்படை அலகு (unit) இக்கடவுள் துகளே.

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலைப் படியுங்கள்,
இப்பிரபஞ்ச ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
இராயபேட்டை, சென்னை -600 014.
போன் : 044 - 28482441 / 28482973
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

Sunday, September 14, 2008

கடவுள் துகள் படைக்கும் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'


செப்டம்பர் 10, 2008 ல் ஜெனிவாவில் CERN (European Organisation for Nuclear Research), LHC (Large Hadron Collider) மூலம் நடத்திய ஆராய்ச்சி போன்று, பிரபஞ்ச சிருஷ்டியின் ஆதி மூலத்தை அறியும் நீண்ட காலப் போராட்டத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பௌதீக வாரிசுகள் 'கடவுள் துகள்' (GOD PARTICLE) வரை முன்னேறி வந்து விட்டனர்.

அதை மனிதன் தன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்வரை அவன் ஓயப்போவதில்லை.

அந்த சூட்சுமத்தை மனிதன் அறிந்து கொண்டால்....

பின் நிகழ்வன பற்றிய புனை கதைதான் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'

Saturday, September 6, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - வடிவமைப்பு

விரைவில் வெளிவரவிருக்கும் எனது நாவலின் வடிவமைப்பு :-


நீங்களும் ஒரு விமானியாக உலகை வலம் வர வேண்டுமா ?

RAW, INTERPOL அதிரடி நடவடிக்கைகளை அறிய வேண்டுமா ?

தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு, துனீசியாவில் தூரின்,

பிரான்சில் பாரிஸ், மார்சைல்ஸ், லியான் மற்றும் கார்சிகா தீவு போன்ற இடங்களை ரசிக்க...

விரைவில்... இங்கேயும் ஒரு சொர்க்கம்.

Thursday, September 4, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - V

ஜமால்முகமது அருணிடம்...
"இறைவன் பூமியில் எல்லா இடங்களிலும் தங்கம், யுரேனியம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை வைக்கவில்லை. அவைகள் இருக்கும் ஒரு சில இடங்களை நாம்தான் தேடிக் கண்டுபிடிக்கிறோம்."
" ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். அந்தத் திறமையைக் கண்டறிந்து அதை வெளிக்கொணரும் பட்சத்தில்தான் அவன் திறமை பளிச்சிடும். உனக்குள்ள திறமை எது என்பது எனக்குத்தெரியும் அருண். நீ என்னோடு வரத் தயார் என்றால் இந்தக் கூழாங்கல்லை வைரமாக்க வேண்டியது என் பொறுப்பு. "

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - IV


மனிதன் முயலும் முயற்சிகளுக்கு நம்பிக்கை என்பது புகலிடம்!

வாழ்க்கை கைநழுவிப் போகும்போது நம்பிக்கை என்பது பாய்மரம்!

ஆபத்தில் மனம் அலைபாயும்போது நம்பிக்கை என்பது கலங்கரை!

கடவுளின் எல்லா ஆசிகளுக்கும் நம்பிக்கை என்பது உறுதிமொழி!

Sunday, August 31, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - III

பாரிஸ் - லக்ஸம்பெர்க் பூங்கா

ஏஞ்சலின் : நான் மட்டும் உண்மையை சொல்லியிருந்தால் என்னையும் பலியிட்டு நீங்களும் அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு பலியாகியிருப்பீர்கள்.

அருண் : மூளையிருப்பவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். தம் குரு அரிஸ்டாட்டிலின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு இந்திய துறவியை உடன் வருமாறு பணித்தார் அலெக்ஸாண்டர். "மகன்களை மன்னர்கள் வற்புறுத்த முடியாது," என்று உடன் செல்ல மறுத்தார் சன்யாசி.

"என்னோடு கிரேக்கத்துக்கு வர மறுத்தால் அடுத்த வினாடி உன் தலை ஜீலம் நதியில் மிதக்கும்...ம்...புறப்படு" என்று வாளை உறுவினான் அலெக்ஸாண்டர்.'

அலெக்ஸ்ஸாண்டரின் கோபாக்கினி துறவியிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. 'மகா அலெக்ஸாண்டருக்கு இந்த துறவி உத்தர விடுகிறேன், ம்... ...வெட்டி எறி என் தலையை' என்றார் துறவி ஆவேசமாக.'

ஓங்கிய கை ஓங்கியபடியே நிற்க அதிர்ச்சியில் கல்லானான் அலெக்ஸ்ஸாண்டர்! மகுடம் சூட்டிய மாமன்னர்களே எதிரில் நிற்க திராணியற்று ஓடி ஒளியும் போது, கேவலம் உடுத்த முழம் துணி இல்லாத இந்த சன்யாசி, அலெக்ஸாண்டருக்கு உத்தரவிடுவதா? அவன் உள்ளம் கூனிகுறுகிப் போனது. உடை வாள் உறைக்குள் போனது.

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II

தாய் ஒலிம்பியா அருகில், உப்பரிகையில் சோகமாய் சிறுவன் அலெக்ஸாண்டர் அமர்ந்திருக்க, இரண்டாம் ஃபிலிப் மன்னன் கிரேக்கம் முழுவதும் வாகை சூடிய பெருமிதத்தில் ஊர்வலமாய் தலைநகரில் பிரவேசித்தான்.

ஊர்வலம் முடிந்து வந்த மன்னன், மகன் முகம் வாட்டமுற்றிருப்பதை அறிந்து அவன் நாடியை உயர்த்தியபடி "மகனே இந்த நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது உனக்குமட்டும் என்ன குறை? என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் "தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே?"

இதை சற்றும் எதிர்பாராத மன்னன் சமாளித்து விட்டு "மகனே முரட்டுக் குதிரை - 'பெர்ஸபோலஸை' அடக்கிய உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் மாசிடோனியா மிகச் சின்னஞ்சிறிய நாடு! நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை!" என்றதும் தந்தையை கட்டிப்பிடித்து காலில் விழுந்தான் அலெக்ஸாண்டர்.

(கார்சிகா தீவில் அருணை உத்வேகப்படுத்த பத்மநாபன் கூறிய சரித்திர மேற்கோள்)

Sunday, August 17, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலின் சில முத்துச் சிதறல்கள்... ...


தாரிணி : இப்படி முற்றும் துறந்த முனிவர் மாதிரி பேசறீங்க. உங்க நடத்தை அப்படியில்லையே? விமானங்கள் சாகசம் சரி. ஆனா ஆர்டின்ல அம்பு விட்டு பறந்தீர்களே? முனிவர்களுக்கு எதற்கு இந்த வேலை? கன்ட்ரோலர் ஆப் தி டீம் ஆப்பரேசன்ஸ் ஆச்சே! பதில் சொல்லுங்க. அதுவும் மூன்றாவதாக இதயத்தைத் துளைத்துச் சென்ற விமானத்தை ஓட்டியது நீங்கள்தானாமே!


".... .... ...."


"என்ன பேச்சே காணோம். இதயங்களை துளைத்துப் பார்ப்பதில்தான் உங்க ரசனை இருக்கும் போலிருக்கு சரிதானே?"


அருண் : இதயத்தைப்பற்றி இதயமில்லாதவங்க கிட்ட என்னத்தை பேசறதுன்னுதான் யோசிக்கிறேன். நான் ரோட்ல சரியா இடப்புறமாத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். தவறான வழில போறவங்க என்னை பார்த்து விரலை நீட்ட வேண்டாம்.

இங்கேயும் ஒரு சொர்க்கம் - பதிப்பகத்தார் பார்வையில்!

சேதுக்கரை என்ற தென்தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாகத் துவங்கும் இந்த நாவல் களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது.


எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கி இருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மையாகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.


திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து ஆய்வு ரகசியத்தைத் திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.


ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னிப் பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத்தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத்தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்றுகருதத்தக்க நல்ல நாவலாகும்.


அருண், தாரிணி, பத்மநாபன் முதலான கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்று என்றும் வாழும்பான்மையுடையன.


இந்நாவலாசிரியரின் முதல் நாவலான "கனவு கிராமம்" ஏற்கனவே தமிழக அரசின்புதினத்திற்கான முதல் பரிசை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் இவரின் நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" பல பரிசுகளைப் பெறுவதுடன் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுமென நம்புகின்றோம்.


இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.


- பாவை பப்ளிகேஷன்ஸ்

Sunday, August 10, 2008

"இங்கேயும் ஒரு சொர்க்கம்"

பாரதி கண்ட கனவாம் "சிங்களத் தீவினுக்கோர் பாலம்" நனவாக
ஒரே வாரம் !

காஷ்மீர் - கன்னியாகுமரி அல்ட்ரா மாடர்ன் நெடுஞ்சாலை போட

ஒரே மாதம் !

கங்கா - காவேரி அதி நவீன இணைப்புக் கால்வாய் அமைக்க
ஒரே ஒரு வருடம் !

அடுத்த வருடம் பாருங்களேன் விண்ணிலிருந்து பார்ப்பவர்களுக்கு, நம் பூமியில் சீன நெடுஞ்சுவர் மட்டுமல்ல, கங்கா - காவேரி இணைப்புக் கால்வாயும் தெரியும் !

- என வெற்றி முழக்கமிட்ட விஞ்ஞானியை...
செந்தீயின் கோர நாக்குகள் விழுங்க முயல...

அவர் கதியை அறிய இந்திய நாடு மட்டுமல்ல
உலகமே பதற்றத்தில் துடித்தது.

விடை தேடும் ஒரு பயணமாக "இங்கேயும் ஒரு சொர்க்கம்"
நாவலைக் கையில் எடுப்போம்...

புத்தம் புதிய விஞ்ஞானக் கருத்துக்களை நாடி நாமும் ஒரு விமானியாக,
பிரான்சில் - பாரிஸ், மார்சைல்ஸ், லியான், கார்சிகா தீவு,
இந்தியாவில் - தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு,
என விமானத்தில் வலம் வருவோம் !

விரைவில் இந்நாவல் வாசகர்களின் கையில் !

பறக்கத் தயாராவோம் !

வெளியீடு :

பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
17 / 142, ஜானி ஜான் கான் சாலை,
இராயபேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973

Monday, January 7, 2008

"கனவுக் கிராமம்" - அங்கீகரிக்கப் பட்ட தருணம்...

கனவுக் கிராமம் - பரிசளிப்பு விழா


1997 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ‘புதினம்’ எனும் தலைப்பில் போட்டியிட்டு முதல் பரிசு ரூ.10,000/- பெற்றது.

16-01-1999 உழவர் திருநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Sunday, January 6, 2008

வாசகர்களின் பார்வையில் "கனவுக் கிராமம்"...

திரு.அ.ஜேம்ஸ் வில்லியம்ஸ், தலைவர், மதுரை காமராஜ் – மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு (MUTA)

கனவுக் கிராமம் திரு.அறிவியல் நம்பி அவர்களின் கன்னி முயற்சி…

ஆனால் அதன் சுவடுகள் எங்கும் தெரியவில்லை…

ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் போல் கதையை அற்புதமாக நகர்த்துகிறார்… தன் எளிய நடையில் ஆங்காங்கே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச் சாதரண வாசகர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறார்…

இங்கிலாந்துக்குச் செல்லாமலேயே அங்குள்ள பல நகரங்களின் மூளை முடுக்குகளையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி விவரிக்கிறார்…

தமிழ் இலக்கியத்தோடு மட்டுமின்றி ஐரோப்பிய இலக்கியத்தோடுகூட தனக்கிருக்கும் பரிட்சயத்தைக் காட்டுகிறார்…

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் “கனவுக் கிராமம்” சுவாரஸ்யமான ஒரு நாவல் மட்டுமல்லாமல் ஒரு அறிவு பெட்டகமாகவும் திகழ்கிறது…

ஏப்ரல் 1999 அமுத சுரபி மாத இதழில், பத்மா சமரசம் அவர்கள்


இந்நூல் ஆங்கில குற்றப் புதினங்களைப் போன்று விறுவிறுப்பாகச் செல்கிறது…

அகதா கிறிஸ்டி, ஆட்லிச்சேஸ், அயன் பிளெமிங் ஆகியோர் தமிழில் எழுதியது போல் இப்புதினம் உள்ளது…

குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் தமிழ் பேசி மோகனாக உலா வருவது போல் உள்ளது...

இது தமிழில் மூல நூல் எனும்போது பெருமையாக உள்ளது…

நூல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் :

1) BOOKS FOR EVER
2) BOOKS FOR THE HOUR
3) BOOKS FOR NEVER

இதில் "கனவுக் கிராமம்" முதல் வகையைச் சார்ந்தது…

பிப்ரவரி 1999 மாணவர் சக்தி மாத இதழ் - புத்தக விமர்சனம்


கனவுக் கிராமம் – சமுதாயக்கதை என்ற எண்ணத்தை தலைப்பு ஏற்படுத்தலாம்…முகப்பு அட்டை கம்ப்யூட்டர் கதையோ என்ற பிரமிப்பை ஏற்படுத்தலாம்...ஆனால் கதையோ விறுவிறுப்பான ஜேம்ஸ் பாண்ட் நாவலாக உள்ளது…


படிக்க கையில் எடுத்தால் கீழே வைக்கத்தோனாத அளவிற்கு விறுவிறுப்பான நடை கையாளப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது…

பிரிட்டன் பற்றியும் காமன்வெல்த் நாடுகள் குறித்தும் இந்நாவலில் விவரிக்கப்பட்ட விதம் அந்நகரங்களை நேரில் பார்த்த உணர்வைத் தோற்றுவிக்கின்றன…

இந்நாவலில் கதாநாயகன் கையாளும் விஞ்ஞான புதுமைகள் கைகூடும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லை…

ஆகஸ்ட் 1998 – மங்கையர் மலர் – புக் ஷெல்ப் பகுதி


அறிவியலோடு இணைந்த சுவாரஸ்யமான நவீன நாவல்...

புதுமையான விஷயங்கள் படிக்க விரும்புகிறவர்களுக்கு சுவாரஸ்யம்…

S.S. போத்தையா, என்னுடைய பள்ளி ஆசிரியரின் விமர்சானக் கடிதம், 16.06.1998

"கனவுக் கிராமம்" – ஒரு துப்பறியும் நாவலாக இருந்தாலும், ஆபாசம், வன்முறை இல்லாமல், பக்கத்திற்கு பக்கம் அறிவியல், வரலாறு, புவி இயல், இலக்கியம் பற்றிய விஷயங்களை ஏற்ற வகையில் கதை போக்குடன் இணைந்து சுவை குன்றாமல் விறுவிறுப்பு குறையாமல் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாது…

கி.ராஜ நாராயணின் பாஷையில் சொல்வதென்றால், "நீ தமிழுக்கு கிடைத்த ஒரு வசமான கை !"...

பதிப்பகத்தாரின் பார்வையில் "கனவுக் கிராமம்"



ஓர் அடர்ந்த ஆலமரத்தை, போன்சாய் மாதிரி சிறு பூந்தொட்டியில் அடக்கும் வித்தை போல் பல்வேறு சம்பவங்கள் ஒருசேர ஒரு நாவலில் அடக்கும் திறமை கைவரப் பெற்றால், வெற்றி நிச்சயம்...

இந்த வகையில் இந்த நாவலாசிரியர் தன் கன்னி முயற்சியிலே இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம்...

'எந்த நாவல் படித்ததும் உங்களுக்கு பூரண திருப்தியளிக்கிறதோ, அதுவே சிறந்த நாவல்' என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞரின் வாக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது இந்நாவல் எனில் அது மிகையில்லை...

- மதி நிலையம் (பதிப்பகத்தார்), தியாகராய நகர், சென்னை - 17

கனவுக் கிராமம் - ஒரு அறிமுகம்...

விஞ்ஞான தொலைத்தொடர்பு சாதனங்களால் உலகம் ஒரு கிராம அளவில் சுருங்கிவிட்ட இக்காலத்தில் உலக ஞானம் நமக்கு எத்தனை அவசியம் என்பது சொல்ல வேண்டியது இல்லை...வெளிநாடுகளுக்கு நேரில் சென்று அந்நாடுகளின் கலாச்சாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்து வந்து எழுதுவது என்பது பொருளாதார ரீதியில் நமக்கு கட்டுபடியாகாத ஒன்று...அந்நாடுகளுக்கு போகாமல் நாம் எழுத முடியுமா? என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு விடைதான் "கனவுக் கிராமம்"...

இதற்காக உலகைச் சுற்றுவதர்க்குப் பதிலாக சில நூலகங்களை வலம் வந்தேன்...எதிர்பார்த்ததற்கும் மேலாகவே லண்டன் நகரைப் பற்றி ஒவ்வொரு சதுர மீட்டருக்கும், பிரிட்டனைப் பற்றி ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் தகவல்கள் கிடைத்தன...

பல கதைகளில் சொல்லப்பட்ட கற்பனைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உண்மைகளாகி உள்ளன...முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட பிரெஞ்சு தத்துவ ஞானி மாண்டஸ்க்கியூவின் கூற்று இன்று உண்மையாகி ஐரோப்பா கண்டமே ஒரே நாடாக மாறி அடுத்த நூற்றாண்டில் காலடி வைக்க இருக்கிறது...இதேபோல இந்நூலின் வாயிலாக நான் அப்போது வலியுறுத்திய பல கருத்துக்கள் இன்று உண்மையாகி வருகின்றது...

இலக்கிய ரீதியில் தம் ஆற்றலால் அறிவுத்திறத்தால் தமிழன்னைக்கு மாலைகளாகச் சூட்டி மகிழ்ந்த மாமேதைகள் கொலுவீற்றிருக்கும் இத்தரணியில் அறிமுகமே இல்லாத நான் ஒரு சிறு மலர் கொண்டு இந்நாவலின் வாயிலாக அன்னைக்கு அர்ச்சனை செய்திருக்கிறேன்...

என்னுடைய எழுத்துலகம்...

எனது கல்லூரி பட்டப் படிப்புக்கு பிறகு என் இளமைக்காலத்தை புத்தக நிலையங்கள், நூலகங்கள் என வருட கணக்கில் செலவிட நேர்ந்தது...

வளமான நூல்கள், போதுமான நேரம், சிந்திக்க இதமான சூழல் எனில், அச்சிந்தனைச் செழிப்பில் நம் கற்பனைத் திறன் கருக்கொள்ள இயல்பு போலும். அத்தகைய இன்சூழலில் ஏதாவது ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளும் முகிழ்த்தது...

ஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுத்து நடனமாட, அரங்கம் தேர்ந்த ஒன்றாகும் களம் புதுமையாகவும் இருக்க விரும்புவது இயற்கையே...அத்தகைய தேடுதலின் போது ஆங்கில நாவல்களை ஒப்பிடுகையில் தமிழில் பயண நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் தவிர்த்து வெளிநாடுகள் மற்றும் விஞ்ஞானம் பற்றிப் பேசிய தமிழ் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...இது என் மனதை நெருடியதன் தாக்கமே "கனவுக் கிராமம்" எனும் நாவல் மலர காரணமாயிற்று...

என்னுடைய எழுத்துலக பயணத்திற்கு இதுவே முதல் வித்து...
அடுத்து தினத்தந்தியில் நாற்றாக வெளிவந்தது "மனிதாபிமானம்" என்ற சிறுகதை...

வரவிருக்கும் எனது இரண்டாவது நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" கிளைத்துப் பரவ வாசக அன்பர்களின் அபிமானம், பேருதவி புரியும் என எதிர்பார்க்கிறேன்...